புதன், 12 மே, 2010
புதன், 9 டிசம்பர், 2009
சனி, 31 அக்டோபர், 2009
நண்பர்களுக்கு வலை விரிக்கும் ...
நான் நாகையில் 1953யிலிருந்து 1964வரை பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். பலவேறு கால கட்டத்தில் நட்பு பலப்பட்டது. பல்கிப் பெருகியது. சில நட்புக்கள் ஆழப்பட்டது. சில சுருங்கின. சில நண்பரகள் கருத்து வேறுபட்டு விலகினர்.
rangmani1951@gmail.com
வெள்ளி, 2 அக்டோபர், 2009
நாகை பெரிய கோயில்
இத்திருக்கோயில், தேவார தலங்களில் 82ஆவதாகவும், 64 சக்தி பீடங்களிலும், சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகவும் பெருமையாகத் திகழும் தலமாகும்.
ஆதிசேஷன், சிவபெருமானைப் பூஜித்த தலமாதலால், நாகப்பட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறுவர்.
புண்டரீக முனிவரின் பக்தியையும் தவத்தையும் மெச்சிய சிவபெருமான், அம்முனிவரைக் காயத்துடன் ஆரோகணித்து ஏற்றுக்கொண்ட காரணத்தால், இங்கு சிவன் காயாரோகணேஸ்வரர் ஆகிறார். இங்குள்ள சிவலிங்கம் புண்டரீக முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரின் திரு உருவம் உட்பிரகார கிழக்குப் பகுதி தூணில் அழகுற செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் பின்புறம் உள்ள குளத்திற்கு, 'புண்டரீக குளம்' என்று பெயர்.
இந்திரனுக்கு உதவிய சாலீசுக மன்னனுக்கு, மன்னன் வேண்டியபடி, இந்திரன் பூஜித்து வந்த சுந்திர விடங்கர் விக்கிரகத்தை தர, அதை மன்னன் காயரோகணேஸ்வரர் சன்னிதிக்குத் தென் புறத்தில் பிரதிஷ்டை செய்தான்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அதிபத்தி என்ற மீனவ சிவ பக்தர், பக்தி மேலீட்டால், தனக்கு கிடைக்கும் முதல் தடவை மீன் அனைத்தையும் உறுதியுடன் சிவனுக்கே அர்ப்பணித்தார். சோதனை விரும்பிய சிவபெருமான், சில நாட்கள் மீன் கிடைக்காமல் செய்ய, சிறிதும் கலங்காத அதிபத்தி பட்டினி கிடந்து, சிவனை வேண்டினார். மறுநாள் ஒரு மிக அழகிய மீன் கிடைத்தும் அதையும் பரமனுக்கே அர்ப்பணித்தார் பரம பக்த அதிபத்தி.. மறுநாள் கிடைத்த வெள்ளி மீனையும் அவ்வாறு ஆண்டவனுக்கே சமர்பித்தார். கடைசியாக எல்லோருக்கும் வாழ்நாள் முழுதும் வளம் பெற வைக்கத்தக்க, தக தகவென மின்னும் ஒரு தங்க மீனைப் பரமன் தர, யார் சொல்லியும் கேளாமல், அதையும் தான் போற்றும் எம்பிரான் காயாரோகணேஸ்வரருக்கே அர்ப்பணிக்க, அம்மையும் அப்பனும் மனமகிழ்ந்து, அவருக்குக் காட்சி தந்து, "சிவலோகம் சென்று சிவகணங்களுடன் சேர்ந்து, ஒப்பில்லாத பேரின்பம் அடைக" என்று அருள் வழங்கினார்.
அதிபத்தரும் பல நாட்கள் சிவன் தாள் போற்றி, அவன் அருளால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து, சிவனடி சேர்ந்து முக்தி அடைந்தார். 'அதிபத்தி நாயனார்' என்ற திருநாமத்துடன், 49ஆவது நாயன்மாராக ஆட்கொள்ளப்பட்டார் என்பது நாகப்பட்டின தல வரலாறு. இக்கோயிலில் அதிபத்தி நாயனாருக்கு ஒரு தனிச் சன்னிதி உள்ளது.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட தலம் இது.
"வினையிலே விழுந்து அழுந்தி வேதனைக் கிடமாகாரே
கனையுமா கடல்சூழ் நாகைமன்னு காரோணத்தானை
நினையுமா வல்லூர் ஆகி உய்யலாம் நெஞ்சினீரே"
என்று பாடுகிறார் அப்பரடிகள்.
திருக்கடையூரில் அபிராமி பட்டர்,
"தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும், தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமிலா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே
கனம் தரும் பூங்குழளாள் அபிராமி கடைக்கண்களே"
என்று பாடியதற்கு ஒப்ப,
பாயும் குதிரைகளும், யாளிகளும் அமைந்த, தோரணங்கள் அலங்கைரிக்கப்பட்ட, இருபுறமும் சக்கரங்கள் கொண்ட ரதம் போன்ற மகா மண்டபத்தில், பூப்பெய்த பருவத்தினளாய் 12 வயதுடையவளாய், பாசாங்குசம் ஏந்தி, அபய முத்திரையுடன், கரிய அகன்ற கண்களை உடையவளாய், அன்னை நீலாயதாக்ஷி (கருந்தடங்கண்ணி) மகப்பேறும், மகத்தான செல்வமும், வேண்டுபவர்க்கு வேண்டியதையும், நினைத்த நல்லவற்றை நடத்திக் கொடுத்தும், அழகுத் திருக்கோலத்தில் இருந்து அருளாட்சி செய்து கொண்டிருக்கிறாள். நிலவின் ஒளியை மறைக்கும் ஒளி மிகுந்த திருமுகம், அருளும் கருணையும், வாத்ஸல்யத்தையும் வாரி வழங்கும் நீலத்திருக் கண்கள்.
"நீ என்னிடம் வந்துவிட்டாய், இனி கவலை வேண்டாம் குழந்தாய், நீ நினைத்ததை நான் செய்து தருகிறேன்" என்று அபயம் அளிக்கும் அபய ஹஸ்தம். இத்திருக் கோலத்தை ஒரு தடவை மட்டும் தரிசித்தால் கூட நமது பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.
அன்னை கருவறைக்கு எதிரில், ஒரு கண்ணால் அம்பிகையையும், மற்றொரு கண்ணால் ஈசனையும் தரிசித்து மகிழ்வது போல், தலையைச் சற்றே சாய்த்து எழிலுடன் அமர்ந்திருக்கும் நந்தி தேவரின் சிலை காண்பதற்கும் தரிசிப்பதற்கும், கண் கொள்ளாக் காட்சி..
இது தவிர, இக்கோயிலின் சிறப்புகள் _
* நாகாபரண பிள்ளையார் தான் இக்கோயிலின் நுழைவாசலில் தனிக்கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்; பாம்புகளை நகைகளாக அணிந்துகொண்டு ஆசி வழங்கும் பிள்ளையார் இவர் ஒருவரே. திருநாகேஸ்வரத்திற்கு முன்பான இக்கோயிலில், ராகு, கேது தோஷங்கள் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிள்ளையாராக இருக்கிறார்.
* இங்குள்ள நவக்கிரகர்கள் சன்னிதியில் அவர்கள் அனைவரும் மேற்கு நோக்கியிருக்கிறார்கள் என்பதோடு, தசரத சக்கிரவர்த்தியினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வரர் தனியாக தெற்கு நோக்கி சாந்தமூர்த்தியாக அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
* ஜீவ சமாதி அடைந்ததாக கருதப்படும் 18 சித்தர்களில் ஒருவரான அழுகுணி சித்தர் தனி சன்னிதியில் தவக்கோலத்தில் பக்தர்கள் வேண்டுவதை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
* நாயன்மார்களை தொகுத்து தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் பொற்காசு பெற்றது இத்தலத்தில் தான்.
* அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றி பாடப்பட்ட ஒரே கல்லிலான வள்ளி-தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமானின் அழகான திரு உருவம் இக்கோயிலின் கோனார் மண்டபத்தின் மேற்கு புறத்தில் அமைந்துள்ளது.
* இக்கோயிலில் கல்லிலான சங்கிலி அமைக்கப்பட்டிருக்கிறது.
* சப்தரிஷிகளுக்கும் ஈசன் காட்சி கொடுத்த தலம் இது.
அன்னை சக்தியின் ஆட்சி நடைபெறவது, மதுரையம்பதியில் மட்டுமல்ல.
அவள்
* காஞ்சியில் காமாட்சியாகவும்,
* காசியில் விசாலாட்சியாகவும்,
* நாகையில் நீலாயதாக்ஷியாகவும்
* ஆரூரில் கமலாக்ஷியாகவும்
அருளாட்சி புரிந்துவருகிறாள்.
அதானால்தான், அன்னையைப் போற்றும்பொழுது,
"அம்மை காமாட்சியே கருணா கடாட்சியே,
அரிய மதுரை ஆளும் மீனாட்சியே
நம்பும் அடியார்கள் கண்ணுறும் காட்சியே
நாகையதனில் வாழும் நீலாயதாக்ஷியே
சம்பு மோகித்திடும் காசி விசாலாக்ஷியே
சாலத் திகழும் ஆரூர் கமலாக்ஷியே
அடியாரைக் கரையேற்றும் அகிலாண்ட நாயகியே
கும்பிட்டு உனதடி குறுகிப் பணிந்தோம்
கெளரியே எழுந்தருள்வாயே"
என்று போற்றி வணங்குகிறோம்.
இத்துணை சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயில், பக்தர்கள் அதிக அளவில் தரிசிக்க வராததால், சரிவர பராமரிக்க முடியாத நிலையில் இருப்பது, வருந்தத்தக்கதாக இருக்கிறது. அரசும், அதைச் சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இன்னும் நன்றாகக் கவனித்தால், சரித்திரப்புகழ் பெற்ற பழமையான இத் திருக்கோயில் அதற்குரிய மதிப்பையும் புகழையும் மீண்டும் பெற்று, திருவிழாக்கள் அனைத்தும் நல்ல முறையில் நடத்தப்பட்டு, சீரும் சிறப்புடன் திகழ உறுதுணையாகும் என்பது நிச்சயம்.
பக்தர்களும் இக்கோயிலுக்கு அடிக்கடி சென்று, சக்தி வாய்ந்த அன்னை நீலாயதாக்ஷி சமேத காயாரோகணேஸ்வரர், மற்றும் இதர தெய்வங்களின் அருளுடன் எல்லா ஐஸ்வர்யங்களும் பேறும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறோம்.
"கண்கவர் தங்கமய நீலாயதாக்ஷி
என்றென்றும் நமஸ்காரம் ஏற்றருள் புரிவாயே!"
புதன், 30 செப்டம்பர், 2009
நாகை தமிழ்
சனி, 26 செப்டம்பர், 2009
வாக் தி டாக்!
கடந்த எட்டு வருடங்களாக காலையில் நானும், நண்பர் ஷ்யாமும் சுமார் ஒரு மணி நேரம் நடப்போம். ஷ்யாம் வீடடில் காபி குடித்துவிட்டு நடக்கத் தொடங்குவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அமையும். சற்று சீக்கிரம் செல்வோம் என நினைத்தால் எல்லார் வீட்டிலும் பெருக்குகிறோம் என்ற பெயரில் தூசியை பறக்கவிட்டு எங்கள் தும்மலை பெருக்குவர். ட்ராஃபிக் அதிகம் இருக்காது என்ற கணிப்பில் வண்டிகள் வெகு வேகமாகக் கண்டபடி செல்லும். சென்ற வாரம் அந்தக் காலை வேளையில், ஒரு பெண், அப்பாவுடன் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறேன் என்று ஒரு திருப்பத்தில் தேமே என்று வந்து கொண்டிருந்த பேப்பர் போடும் பையனின் சைக்கிளில் மோதிவிட்டாள். நாங்கள் அந்த பையனின் பக்கத்தில் வந்து கொண்டிருந்தோம். சற்று தப்பியிருந்தால் எங்கள் மேலும் இடித்திருப்பாள்! இதில் கொடுமை என்னவென்றால் கார்க்காரர் டேமேஜ் ஆன சைக்கிளுக்கு 50 ரூபாய் கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டார். அடிபட்ட பையன் சிதறிய பேப்பர்களை சேகரிப்பதில் முனைப்பாகிவிட்டான். பாவம் அப்பாவிப் பையன்!. சாலையில். நடப்பவர்களுக்கு உள்ள அசௌகர்யங்களில் இதுவும் ஒன்று. நாம் பாட்டுக்கு நடக்கிறோம் என்று இல்லாமல் நாலா பக்கமும் பார்க்கவேண்டும். காலையில் நிதானமாக எழுந்து சற்று லேட்டாக போனால் காலை வெய்யில் கூட சுட்டெரிக்கும்!
நாங்கள் நடப்பதற்கு தேர்ந்தெடுதத ஏரியா அசோக நகர் - மே.மாம்பலம் பார்டர் சாலைகள். நாங்கள் நடக்க காரணம் உடல் எடை குறைப்பு/அதிகரிப்பு ஆகாமல் இருக்க. .ஷ்யாமும் நானும் மாட்ச் ஆனதற்கு நாங்கள் நீண்ட கால நாகை நண்பர்கள் என்ற காரணம் மட்டுமில்லை. ஷ்யாம் நிறைய பேசுவார். நான் நிறைய கேட்பேன் . தவிர இருவருக்கும் டயபெடிஸ் உண்டு!! பேசாமல் வாக் செய்ய வேனண்டுமென்று சிலர் சொல்வார்கள். ஷ்யாம் நிறைய்ய செய்திகள் சொல்வார். டாபிக் இது அது என்று கிடையாது. தெரு கிசுகிசு, ஆஃபிஸ் கிசு கிசு, பாலிடிக்ஸ் என்று எல்ல விஷயங்களையும் அலசுவோம். inspiration for walk is talk! மற்ற நேரங்களில் வெளியில் போனால் ஊர் சுற்றுகிறாயென்னும் வீட்டினர், காலையில் நடந்தால் ஒன்றும் சொல்வதில்லை
இப்போது நிறைய பேர் வாக் செய்கிறர்ர்கள். டாக்டர்கள் சர்வ ரோக நிவாரணியாக இதை பரிந்துரைப்பதாலும், அதிக செலவில்லா சமாச்சாரம் என்பதாலும், ஒருவிதமான தப்புதல்(escape) காரணி என்பதாலுமோ(?) வயதானவர்கள் பெரும்பாலும் துணைவியருடன் வருகிறார்கள். அவர்களைப் பர்ர்த்தால் நமக்கும் உத்வேகம் வரும். வழக்கமாக நடப்பவர்களைப் பார்க்கும்போது உடனே பேசமாட்டோம். சில காலம் சென்று முறுவலித்து பின் ஹெல்லோ சொல்லும் அளவிற்கு கடந்த பின் அளவளாவலாம் என்ற ஸ்டேஜ் வரும்போது அனேகமாக இருவரில் ஒருவர் வர இயலாமை ஏற்பட்டுவிடும். இரயில் ஸ்னேகிதம் போல்தான் இந்த வாக் ஸ்னேகமும்!
சாலையில் நடப்பவர்களைவிட பார்க்குகளில் உலாத்துபவர்கள் சற்றே வித்யாசப்படுவார்கள். எப்படி? இவ்வளவு சுற்றுதான் என்று கணக்கிட்டு நடப்பர். வண்டிகள் தொந்திரவு இல்லாததால் ஹெட்செடடுடன் நடை பழகுவர். நடக்கையில் மீண்டும் மீண்டும் ஒருவரை கடந்து செல்கையில் பார்க்க வேண்டியிருப்பதால் இவர்கள் இளமுறுவல்கூட காண்பிக்கமாட்டார்கள்.
சில பெரியவர்கள் சற்றே அசட்டு தைர்யத்துடன் வயதுக்கு பாந்தமில்லாத பயிற்சிகளை செய்வார்கள். சொன்னாலும் ஒப்பபுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் வேகமாக தலையை சுழற்றும்போது எங்கே தலைசுற்றி மயக்கமாகப் போகிறார்களோ என்று பயம் வரும்
வயதான பெண்களும் காலையில் பார்க்குக்கு வருவார்கள். அவர்கள் சற்றே கூச்சத்துடன் சிறார்களுக்கான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவார்கள். இளமைக்காலத்திலோ, சிறு பிராயத்திலோ நேரமோ, சுதந்திரமோ இல்லாமல் இருந்திருப்பார்களோ? அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் அட்வைஸ்களைத் தொகுத்தால் பல டீவி மெகா சீரியல்களுக்கான கரு கிடைத்துவிடும். தொடர்ந்து வாக் போவதால் அங்கு வருபவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனுமானம் உண்டாகும். வெவ்வேறு பென்சுகளில் அமர்ந்து செல்லில் உரையாடியவர்கள் (பிறர் யாரும் அறியமாட்டார் என்ற நெருப்புக்கோழி நம்பிக்கை) சில காலத்திற்குப் பின் கைகோர்த்து செல்வர்.. வாழ்த்துக்கள்! பார்க்கில் பிறிதோரிடத்தில் RSS ஷகா நடக்கும். சிறுவர்களை எப்படி கவ்ர்ந்து அவர்கள் இயக்கத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்.
சில வருடங்களுக்கு முன் ஸைக்கிளில் அருகம்புல் ஜூஸ் கொண்டு வந்த பெண்மணி, இன்று மாருதி வானில் பல வேறு பாத்திரங்களில் கலர் கலரான திரவங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்! அவர் எங்கு புல் வளர்க்கிறார்? எப்போது புல் பறிக்கிறார்?? எப்போது அரைக்கிறார்?? நல்ல தண்ணீர்தானா?? என்றெல்லாம் கேள்விக் கணைகள் மனதில் தோன்றினாலும் மக்கள் அருகம்புல் ஜூஸ் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்று தீவிரமாக நம்புவதால் மேற்கொண்டு ஆய்வதில்லை!
தினமும் நடந்து பழகி விட்டால் பின் ஒரு நாள் வாக்கிங் போகாவிட்டால் கூட ஒரு வெறுமை தோன்றும்!
with love and affection,rangan